Friday, June 14, 2024

 

.         நம் தமிழ்நாடு                                                                                                                              2

புதுமை கண்டு வாழ இன்று

போர் செயுந் தமிழ்நாடு- மறப்

போர் செயுந் தமிழ்நாடு-மிக

முதுமை கொண்ட மடமை வீழ

மோதிடும் தமிழ்நாடு-வீழ

மோதிடும் தமிழ்நாடு                            ( புதுமை)

 

திசையை விண்ணை வென்று நின்று

சிரித்திடும் தமிழ்நாடு-எழில்

சிரித்திடும் தமிழ்நாடு-கொடி

அசைய உயர மண்ணில் நிற்கும்

கோபுரம் தமிழ்நாடு-கலைக்

கோபுரம் தமிழ்நாடு                                      ( புதுமை)

 

 

காவிரி பாயுங் கழனி

கண்ணொளி பெறும் நாடு-முக்

கண்ணொளி பெறும் நாடு-பொழில்

பூவிரிநறும் புனல் விரிந்திடும்

பூங்கொடி  தவழ்நாடு-தமிழ்

பூங்கொடு தவழ்நாடு                                             ( புதுமை)

                               

 

கைகள் வளையின் ஒலியும் அலையும்

கவிதை பேசும் நாடு-நற்

கவிதை பேசும் நாடு-நம்

கைகள் தழுவிக் காதல் புரியக்

கன்னியர் வளர்நாடு-இளங்

கன்னியர் வளர்நாடு                                                    ( புதுமை)

 

 

அலையும் சிலம்பின் இசையும் மலரும்

அவிழ்ந்திடும் தமிழ்நாடு-மலர்

அவிழ்ந்திடும் தமிழ்நாடு-பனி

மலையும் பொதிய மலையும் உறவில்

பொங்கிய தமிழ்நாடு-மணம்

பொங்கிய தமிழ்நாடு                                                     ( புதுமை)

 

 

கிளியி னோடு பழகுங் காதல்

கிளிகள் பேசும் நாடு-பெண்

கிளிகள் பேசும் நாடு-புவி

வெளியில் நடனம் பயிலும் அலையின்

நாதம் பொங்கும் நாடு-கடல்

நாதம் பொங்கும் நாடு                                                       ( புதுமை)

 

 

கம்பன் தந்த அமுத முண்டு

களித்திடும் தமிழ்நாடு-உளங்

களித்திடும் தமிழ்நாடு-பசுங்

கொம்பர்மீது குயில்கள் கவிதை

கொஞ்சிடும தமிழ்நாடு-இசை

கொஞ்சிடும் தமிழ்நாடு                                       ( புதுமை)

 

 

காலம் என்ற கடலின்மீது

கப்பலோட்டும் நாடு-புகழ்க்

கப்பலோட்டும் நாடு-இந்த

ஞாலமென்ற மேடை கண்ட

நாடகத் தமிழ்நாடு-ஒரு

நாடகத் தமிழ்நாடு                                                 ( புதுமை)

 

 

 

உப்பு விளையும் முத்து விளையும்                                                                                                                          3

உணவு விளையும் நாடு-நல்

உணவு விளையும் நாடு-ஓர்

ஒப்பிலாத உரிமை கொண்ட

உணர்வு விளையும் நாடு-தமிழ்

உணர்வு விளையும் நாடு                                             ( புதுமை)

 

கவிஞர் தமிழ்ஒளி      அமுதசுரபி  1951

 

                           

 

 

1       சாதியை விரட்ட கும்மியடி                                                                                                                    

 

கும்மியடி தமிழ்நாடு முழுவதும்

அன்பு ததும்பிட கும்மியடி

நம்மைப் பிடித்த சாதிகள் போயின

நன்மை கண்டோமென்று கும்மியடி

நன்மை கண்டோமென்று கும்மியடி    (கும்மியடி)

 

சாதியால் மனிதரை கூறுபோட்ட

வன்குணம் கொண்டவர் மாய்ந்துவிட்டார்

பிறப்பைவைத்து மக்களைப் பிரிக்க

முனைந்த மனிதர் தலைகவிழ்ந்தார்

முனைந்த மனிதர் தலை கவிழ்ந்தார்   (கும்மியடி)

 

பேதத்தை வளர்த்த சாதியை ஒழித்து

சமத்துவம் காண கூடிவந்தோம்

மனிதருக்குள்ளே உயர்வுதாழ்வு

இல்லையென்று சொல்லி கும்மியடி

இல்லையென்று சொல்லி கும்மியடி  (கும்மியடி)

 

பள்ளிக்கு வந்தோம் படிக்கவந்தோம்

படித்ததால் தெளிவு பெற்று வந்தோம்

பெற்ற தெளிவினை பெற்றோருக்கும்-ஊரில்

சுற்றோருக்கும் கூடி சொல்ல வந்தோம்-ஊரில்

சுற்றோருக்கும் கூடி சொல்ல வந்தோம்                (கும்மியடி)

 

பெண்ணும் ஆணும் சரிநிகரென்று

கற்றதை இங்கு சொல்ல வந்தோம்

ஒன்றுபட்டு வாழ்ந்திடவேயிங்கு

அன்பையும் அறிவையும் வளர்க்கவந்தோம்

அன்பையும் அறிவையும் வளர்க்க வந்தோம்   (கும்மியடி)

 

கூடிவந்தோம் சிறார் கூடிவந்தோம்

கோடிக்கரங்களி ணைந்து வந்தோம்

கற்கவேண்டிய கல்வியை நாங்கள்

கற்று இங்கே நிதம் கூடிவந்தோம்

கற்று இங்கே நிதம் கூடிவந்தோம்      (கும்மியடி)

 

சாதியின் பெயரால்  மதத்தின் பெயரால்

மோதல்க ளெங்கும் நடக்க விடோம்

புவிதனில் ஒன்றாய் வாழ்ந்திடுவோமென்று

உரக்கச் சொல்லி கும்மியடி- சேர்ந்து

உரக்கச் சொல்லி கும்மியடி                        (கும்மியடி)

 

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தோழர் வே. மணி, பேரா.முனைவர். க கணேசன் புலவர்.சு.பழநிச்சாமி ஆகியோரின் கூட்டுப்படைப்பு 2023

 

“சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” எனும் தலைப்பில் கருத்தரங்குகளில் ஆசிரியர்களும் மாணவர்களும்  பெற்றோர்களும் இணைந்து நடத்தும் நிகழ்வில் இசை நடனத்தோடு பல ஊர்களில் பவணி வந்து கொண்டிருக்கின்ற பாடல் இது..

 

 

                எங்க கடலம்மா!

 

நீலச்சேலை கட்டியிருக்கும்

எங்க கடலம்மா

நீவழங்கும் அருங்கொடையால்

உலகம் வாழுதம்மா!

விவசாய முதுகெலும்புக்

கிணையாய் நின்றே

மக்கள் வாழ்வை காத்து நிற்கும்

சமுத்திரத் தாயே!                                       (நீலச்சேலை)

 

பூமிப் பந்தின் நுரையீரல்

நீயேதானம்மா!-உலகில

உயிர்கள் வாழ ஆக்ஸிஜனும்

உன்னால்தானம்மா!

ஊட்டச்சத்தின் பிறப்பிடமே

நீயே கடலம்மா!-உலக

மக்கள் பசியைப் போக்குகின்ற

அன்புத் தாயம்மா!                                  (நீலச்சேலை)

 

வகைவகையாய் மீன்கள் தந்து

வாரியணைக்கிறாய்-எங்கள்

வாழ்வாதாரம் பெருக்கிடவே

வழியும் அமைக்கிறாய்!

ஏற்றுமதி அதிகரித்து

நாட்டைக் காக்கின்றாய்-இந்த

ஆதித்தாயை என்றும் போற்றி

சந்ததி காப்போம்!                                      (நீலச்சேலை)

 

உன்அலையில் கால்பதித்து

உல்லாசம் காண்போம்-உன்

அலைமடியில் ஆடிப்பாடி

ஆனந்தம் கொள்வோம்!

உப்பிட்டு உன்னும்போது

உன்னை நினைப்போம்!-உனை

சீர்குலைக்க எவர்வரினும்

கேடையாமாவோம்!                                  (நீலச்சேலை)